சென்னை: கஞ்சா விற்ற தந்தை மகன் உட்பட நால்வர் கைது... 16.5 கிலோ கஞ்சா பறிமுதல்...
ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்த தந்தை மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தரமணி அரங்கநல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அடையார் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் வெங்கடேசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தியாகராய நகரை சேர்ந்த அரவிந்த் என்ற நபரை பின்தொடர்ந்த போலீசார் கஞ்சா பதுக்கி வைத்திருக்கும் இடத்தை கண்டறிந்து அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதில் 16.5 கிலோ கஞ்சா மற்றும் 4 இருசக்கர வாகனம் மற்றும் 3300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தரமணியை சேர்ந்த சேகர் (எ) சிட்டி சேகர், அவரது மகன் தேவா, திருவல்லிக்கேணியை சேர்ந்த அஜித்குமார் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில் தந்தையும் மகனும் இருசக்கர வாகனம் மூலம் ஆந்திர மாநிலம் கஞ்சனூர் சென்று கஞ்சா வாங்கி வந்து சென்னை முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சிட்டி சேகர் மீது ஏற்கெனவே தரமணி போலீசார் 5.8.2020 ஆம் தேதி கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரை சிறையில் அடைக்காமல் காவல்நிலைய பிணையில் ஆய்வாளர் புஷ்பராஜ் வெளியே விட்டதாக சொல்லப்படுகிறது. கைதுசெய்து வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருக்க மாட்டார் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.