கல்லூரி மாணவியை திருமணம் செய்து தருமாறு வீடுபுகுந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

கல்லூரி மாணவியை திருமணம் செய்து தருமாறு வீடுபுகுந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
கல்லூரி மாணவியை திருமணம் செய்து தருமாறு வீடுபுகுந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சென்னையில் வீடு புகுந்து, கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொடுக்க வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுவேலை செய்தபடி, தனது 18 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், அவரது 18 வயது மகளை தனக்கு திருமணம் செய்துகொடுக்குமாறு கூறி அப்பெண்ணின் மகளது கையைப் பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த நபரின் ரகளையால் இருவரும் கூச்சலிட்டதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த நபரைப் பிடித்து சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த ரஷித் (28) என்பதும், 18 வயது இளம் பெண் கல்லூரிக்குச் செல்லும்போதும், வரும்போதும் ரஷித் அந்த பெண்ணிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளுமாறும் கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும் தெரியவந்திருக்கிறது. அதற்கு இளம் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ரஷித் நேற்று கஞ்சா போதையில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் ரஷித் மீது ஒரு கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சூளைமேடு போலீசார் ரஷித் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com