விபத்தில் சிக்கியது போல் நடித்து போலீசிடம் செல்போன் பறித்தவர்கள் கைது!
சென்னையில் விபத்தில் சிக்கியது போல் நடித்து, தலைமை காவலரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் காவல்நிலையத்தில் தலைமை காவலாக பணியாற்றி வருபவர் பாலசுப்ரமணியன். ராயபுரம் மேம்பாலத்தில் அவர் வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து காலில் அடிபட்டிருப்பது போல் இரண்டு பேர் நடித்துள்ளனர். அப்போது உதவ சென்ற காவலரின் அருகில் நின்ற நபர் செல்போனை பறித்துவிட்டு ஓடினார். அவர்களை பிடிக்க முயற்சி செய்த போது மூன்று பேரில் இருவர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பட்டினம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. பின்னர் தப்பியோடிய டேனியல், சதீஷ் ஆகியோரையும் ராயபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். காவலரிடமே செல்போனை பறித்து சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

