பெரம்பலூர்: ‘45 தடுப்பணைகளில் 6 தான் இருக்கு! மற்றது எங்கே?’ அதிகாரிகள் மீது வழக்குபதிவு!

பாறாங்கல் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தடுப்பணை
தடுப்பணைPT

பெரம்பலூர் அருகே 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டிவிட்டதாக கூறி அரசு நிதி 30 லட்ச ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரர்கள் என மொத்தம் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை யூனியன் மலையாளபட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட ஊராட்சியில், 2019 - 2020 ல் 45 பாறாங்கல் தடுப்பணை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சனப்பாறை ஓடை, காந்திநகர் கூட்டுமருதை ஓடை மற்றும் கொட்டாரக்குன்று முருகன் கோவில் ஓடை ஆகிய மூன்று ஓடைகளில் தலா 15 தடுப்பணைகள் வீதம் மொத்தம் 45 தடுப்பணைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடுப்பணை திட்ட மதிப்பு ரூ 77,000 ரூபாய் வீதம் 45 தடுப்பணைகள் கட்ட 34 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி முழு தொகையும் தனியார் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாறாங்கல் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். அவர்கள் சமூக தணிக்கை செய்ததில் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறி அரசு நிதி 30 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறி அப்போது வேப்பந்தட்டை யூனியனில் ஓவர்சீயராக இருந்த மணிவண்ணன், ஜுனியர் என்ஜீனியர் நாகராஜன், பிடிஓ அறிவழகன் ஆகியோர் மீதும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மலையாளபட்டி துரைசாமி, தழுதாழை பகுதியை சேர்ந்த ராணி, சதீஸ்குமார், வெற்றிவேல் என மொத்தம் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூன்று அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூட்டுச்சதி செய்துள்ளனர் என குறிப்பிட்டு 120-B,167,468,477 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதே போல் தனியார் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் மீது நேர்மையற்ற நோக்கத்துடன் போலியான ஆவணங்கள், பொய்யான பதிவுகளை உருவாக்கி கிரிமினல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த எப்.ஐ.ஆரில் அரசு அதிகாரிகள் A1, A2, A3 என முதன்மை குற்றவாளிகளாக முதல் மூன்று இடத்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் மூன்றுபேரும் பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இவ்வாறு 2019 - 2020 காலகட்டத்தில் மலையாளபட்டியில் பாறாங்கல் தடுப்பணை கட்டிய விவகாரத்தில் அரசு நிதி 30 லட்ச ரூபாய்க்குமேல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி அரசு அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com