சிறார் பாலியல் குற்றத் தடுப்புக்கான போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை, சம்பந்தப்பட்ட இருதரப்பினர் சமரசத்தால் ரத்து செய்ய முடியுமா என ஆராய இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மலப்புரம் மாவட்ட காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவருடன் சமரசம் ஏற்பட்டதாக மாணவியின் தாய் எழுத்துப்பூர்வ கடிதம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் போக்சோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கேரள அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்சோ வழக்கை சமரசத்தின் அடிப்படையில் ரத்து செய்ய முடியுமா என ஆராய வேண்டியுள்ளதாகக் கூறியுள்ளதுடன் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.