அரக்கோணம் சோகனூரில் கொல்லப்பட்ட 2 இளைஞர்களின் உடல்களும் 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி இரவு இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சோகனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, அர்ஜூன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பெருமாள் ராஜபேட்டையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சோகனூர் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 4 நாள்களாக உடல்களை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்கட்ட நிவாரணம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 20 பேரையும் கைது செய்யவேண்டும் எனவும், தங்கள் பகுதி வாயிலாக நடக்கும் மணல்கொள்ளையை தடுக்கவேண்டும் எனவும், அதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய அதிமுக ஒன்றிய செயலாளர் பழனி என்பவரை கைது செய்யவேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் மனைவிகளுக்கு உரிய அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த சூர்யா, அர்ஜூன் ஆகியோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 4 லட்சத்து 12,500 முதல்கட்ட நிவாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்கும்வரை மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.