
சென்னை வளசரவாக்கம் ஓய்.எம்.ஜி.பாபு தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (33). சினிமா இயக்குநரான இவர், தற்போது புதுமுக நாயகனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் “நான் சினிமா இயக்குநராக இருந்து வரும் நிலையில், இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளியையும் நடத்தி வருகிறேன். இந்நிலையில், சாலை விபத்தில் கணவரை இழந்த மைதிலி எம்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக அவருடன் ஒன்றாக வசித்து வருகிறேன். மைதிலி, இதற்கு முன் திருச்சியில் வாழும் தன் குடும்ப நண்பரான ஜெயராம் பாண்டியன் (பாஜக பிரமுகர்) என்பவருடன் இணைந்து பாஜகவில் பணியாற்றியுள்ளார்.
இணைந்து பணியாற்றியபோது மைதிலியின் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்த ஜெயராம் பாண்டியன், தற்போது அதை காண்பித்து அவரை மிரட்டி வருவதோடு, செல்போன் மூலம் ஆபாசமாகவும் பேசி தொந்தரவு கொடுத்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை தேவை” என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த ஜெயராம் பாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சியில் பதுங்கியிருந்த ஜெயராம் பாண்டியனை இன்று கைது செய்த வளசரவாக்கம் போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர், பாஜக பிரமுகர் என்பதும், மைதிலி மட்டுமன்றி வேறு சில பெண்களின் புகைப்படங்களையும் எடுத்து வைத்து அவர்களையும் மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமாகி உள்ளது. மேலும் மைதிலியிடம் பணம் கேட்டு ஆபாசமாக பேசி மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயராம் பாண்டியன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.