நிதிநிறுவன மோசடி: சிக்கிய Neomax! 160 வங்கி கணக்குகளை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள்!

நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களின் 160 வங்கி பரிவர்த்தனை கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்.

நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 34 நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பல்லாயிரக்கணக்கான டாக்குமென்ட்கள், ஹார்ட் டிஸ்க்கள், உயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவனத்தின் பத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் முக்கிய இயக்குனர் பத்மநாபன் உள்ளிட்ட சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து மற்றும் சகாய ராஜா போன்றோர் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் வெளிநாடு செல்ல முயற்சித்தாலோ வெளிநாடுகளில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பி வந்தாலோ விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை கைது செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மீது 100 புதிய புகார்கள் சிறப்பு முகாம் மூலம் பெறப்பட்டுள்ளது. அதன்மூலம் இதுவரை மொத்தம் 22 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Fraud
FraudPT Desk

இந்நிலையில் தற்போது நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களின் 160 வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன என பொருளாதார குற்றப்பிரிவு தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய ஆருத்ரா, ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடிகளின் வரிசையில் தற்போது நியோ மேக்ஸ் நிதி நிறுவனமும் இணைந்துள்ளது. நியோ மேக்ஸ் என்ற மோசடி நிறுவனமும் அதன் 63 துணை நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com