ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன்ஜாமீன் மறுப்பு

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன்ஜாமீன் மறுப்பு
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன்ஜாமீன் மறுப்பு

பொது மக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. 

அவ்வாறு வசூலித்த பணத்தை டிபாசிட்தாரர்களுக்கு திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, இயக்குனர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஸ்,31 என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்ட விரோதமாக, மனுதாரர் மட்டும் 1,100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதால், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்புள்ளதால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி முன் ஜாமீன் கோரிய ஹரீஸின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com