அம்பத்தூர், வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (61). இவர், கடந்த வருடம் ஜூன் மாதம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீலை மாதம் கேகே.நகரில் வசிக்கும் ராமசாமி (64) என்பவர், கோடம்பாக்கம், பாளைக்காரன் குறுக்கு தெருவில் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை பவர் எடுத்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், வீடு பிடித்திருக்கவே அந்த வீட்டை வாங்குவதற்கு விலைபேசி ரூ 1.5 கோடி ரூபாயை வங்கி மூலமாகவும், ஒரு கோடி ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ராமசாமி வீட்டை கிரையம் செய்து கொடுக்காமலும் பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார். ரூ.2.5 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராமசாமி, கொலை மிரட்டல் விடுத்து நம்பிக்கை மோசடி செய்ததாகவும். ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதன் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து ஆய்வாளர் கீதா, ராமசாமியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ராமசாமி மீது ஏற்கெனவே இரண்டு நில மோசடி வழக்குகள் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நில மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.