ஆவடி அருகேயுள்ள வீடொன்றில் திருடிய வடமாநில நபரொருவர், தான் திருடிய வீட்டின் உரிமையாளரின் இருசக்கர வாகனத்திலேயே லிப்ட் கேட்டு சென்ற போது அங்கிருந்த மக்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அப்போது, பொதுமக்கள் அவரை அடித்து காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.
ஆவடி அடுத்த மோரை ஊராட்சி வீராபுரம் கிராமத்தில் வசிப்பவர் ஜெகன். நேற்று காலை இவர் தனது மனைவி, குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ஒருவர், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த சுமார் 7 சவரன் தங்க நகையை திருடியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஜெகனிடமே லிப்ட் கேட்டுள்ளார். இதற்கிடையே ஜெகனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக அவரது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் செல்போனில் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்படியான சூழலில் புது நபரொருவர் லிப்ட் கேட்கிறார் என்றவுடன் அந்நபர் மீது சந்தேகமடைந்த ஜெகன், அவரை சோதனையிட்டுள்ளார். அப்போது அந்நபர் திருட்டில் ஈடுபட்டதும், நகைகள் அவரிடம் இருந்தும் தெரியவந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் அந்நபரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்து அவர் தப்பியோட முயன்ற நிலையில், பொதுமக்கள் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டேங்க் பேக்டரி போலீசார், அந்நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.