
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தின் நடத்துநரைத் தாக்கி அவர் வைத்திருந்த பணப் பையில் இருந்து பணத்தை எடுத்துக்குகொண்டு கும்பல் ஒன்று தப்பிவிட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை விலகிச் செல்லுமாறு கூறும் வகையில், அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்துக் காவலர், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
பின்னர், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தனது நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று அந்தப் பேருந்தை பள்ளிகொண்டா என்ற இடத்தில் வழிமறித்து, நடத்துநரை தாக்கியுள்ளார். பிறகு அவர் வைத்திருந்த பணப்பையை கிழித்து, அதிலிருந்த பணத்தில் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த பேருந்து நடத்துநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.