நீதிமன்றத்துக்குள் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன்!
மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தவர், மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமிலுள்ள திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புர்னா நாகர் தேகா. இவர் மனைவி ரிதா. இவர்களுக்கு பெண்குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புர்னா நாகர் மீது அவர் மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வீட்டுக்குள் மனைவி விடாததால் ஊரைச் சுற்றி வந்துள்ளார் புன்ரா நாகர்.
இந்நிலையில் இந்த வழக்கு திப்ருகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக புர்னா நாகரும் அவர் மனை வி ரிதா தனது மகளுடனும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். விசாரணை நடந்துகொண்டிருந்த போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரிதாவின் கழுத்தை திடீரென்று அறுத்தான் புர்னா. இதனால் கத்தியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ரிதா. அருகில் இருந்தவர்கள் அலறிய டித்தபடி ஓடினார். அங்கு காவலுக்கு இருந்த போலீசார், புர்னாவை பிடித்து இழுத்து உடனடியாக கைது செய்தனர். ரிதாவை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனைவியை கொன்றது பற்றி புர்னா நாகர் கூறும்போது, ‘நான் அப்பாவி. என் மனைவி பொய்யாக என் மீது புகார் கொடுத்து என்னை சிறைக்கு அனுப்பி விட்டார். ஜாமின் கிடைத்தபின்னும் வீட்டுக்குள் என்னை அனுமதிக்கவில்லை. இதனால் கோபத்தில் கொன்றுவிட்டேன்’ என்றார்.