சென்னை: வலி நிவாரணிகளை போதை மாத்திரை எனக் கூறி விற்ற இளைஞர் கைது
சென்னையில் போதை மாத்திரைகள் எனக்கூறி வலி நிவாரண மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் வெளியூரிலிருந்து வந்த மர்ம நபர், போதை மாத்திரைகளை விற்று வருவதாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மூலக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை, பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர், திருச்சி மாத்தூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (19) என்பதும், இவர் திருச்சி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை வடசென்னையில் உள்ள பலருக்கும் போதை மாத்திரைகள் என்று கூறி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. 15 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை 150 ரூபாய்க்கு வாங்கி, அதை ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுபாஷை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 300 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த மாத்திரைகளை யார் யாருக்கு, சுபாஷ் விற்று வந்தார் என்றும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எப்படி 300 மாத்திரைகள் வாங்கப்பட்டது என்பது குறித்தும், கொடுங்கையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.