மகனுடன் சேர்த்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்!

மகனுடன் சேர்த்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்!
மகனுடன் சேர்த்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; தீவிர விசாரணையில் இரு மாநில போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று மாலை இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் இவரின் வீட்டுக்கு சென்றபோது, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும், பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்து ரமேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெண் கவுன்சிலர் ரோஜா ரமேஷ், அவரது மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களது காரிலேயே கடத்திச் சென்றதாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிசிடிவி கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்படும் ஹார்டு டிஸ்க் மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளது தெரிய வந்தது. வீட்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் கவுன்சிலரின் செல்போன் எண் ஆந்திராவில் அணைக்கப்பட்டதும் தெரிய வந்தது. பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட புகார் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவிற்கு தனிப்படை விரைந்துள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக-ஆந்திர எல்லையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வருவதாலும் இரு மாநில காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒப்பந்த பணிகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி, உட்கட்சி பூசல் ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பெண் கவுன்சிலர், மகனுடன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com