``நன்றாக இருந்தபோதே திடீர் வாந்தி”- விசாரணை கைதி மரணம் குறித்து கூடுதல் ஆணையர் அன்பு தகவல்

``நன்றாக இருந்தபோதே திடீர் வாந்தி”- விசாரணை கைதி மரணம் குறித்து கூடுதல் ஆணையர் அன்பு தகவல்
``நன்றாக இருந்தபோதே திடீர் வாந்தி”- விசாரணை கைதி மரணம் குறித்து கூடுதல் ஆணையர் அன்பு தகவல்

விசாரணை கைதி சந்தேக மரணம் குறித்து பேசியுள்ள சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, "ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காவல்துறைக்கு வெறொரு கலரில் பெயிண்ட் அடிப்பது சரியில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் சந்தேக மரணம் தொடர்பாக சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த அந்த விசாரனையின் முடிவில் காவல் உயர் அதிகாரிகள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "குற்ற வழக்கு ஒன்றில் ராஜசேகரை மணலியில் இருந்து பிடித்து விசாரணைக்காக கொண்டு வந்தனர். 27 வழக்குகள் ராஜசேகர் மீது இருக்கிறது. சோழவரம் காவல் நிவையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. என்னென்ன வழக்குகளில் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக விசாரித்தபோது ராஜசேகருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் உள்ளது.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு 1 மணிக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு நன்றாக இருப்பதாக தெரிந்தது. அழைத்து சென்றனர். மீண்டும் 4 மணிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நன்றாக இருந்தபோது வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அழைத்து செல்லும் போது மரணமடைந்து விட்டார்.

இது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176 (1)(ஏ) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார். ராஜசேகரிடம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 3 பேர் விசாரணை நடத்தி உள்ளனர். குற்ற வழக்கை மட்டுமே விசாரித்ததாக தெரிவித்துள்ளனர். காவல் ஆய்வாளர் உள்பட 5 பேரை சஸ்பெண்டு செய்துள்ளோம்.

எவரெடி காலனி போலீஸ் பூத் என்பது ரகசிய இடமில்லை. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தான் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். இதுபோல தொடர்ச்சியாக நடக்கிறது என சொல்ல முடியாது. அதுமட்டுமன்றி, தினந்தோறும் பல வழக்குகள் பதிவாகிறது. அவற்றுக்கான குற்ற விசாரணையை நிறுத்திவிட முடியுமா? வழக்குகள் ரிப்போட் ஆகிறது என்கையில் ஒவ்வொரு வழக்குகளிலும் புலன் விசாரணை செய்வது காவல்துறையின் கடமை. சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவது என்பது வழிமுறையோடு செய்யப்படுகிறது. இதுபோல ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெறும் போது அதனை நெறிபடுத்துவதற்கான முயற்சிகளையும் காவல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.

நெறிபடுத்தும் முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதன்படி `இரவு நேரங்களில் யாரையும் கஸ்டடி வைக்கக்கூடாது. பெண்கள், வயதானவர்களை அழைத்து வரக்கூடாது’ என்பது போன்ற வழிமுறைகளை தினமும் உயர்அதிகாரிகள் தெரிவித்து தான் வருகிறோம். ஆகவே ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காவல்துறைக்கு வேறொரு கலரில் பெயிண்ட் அடிப்பது சரியில்லாத ஒன்று. ஏனெனில் அப்படியான காவல்துறை, சென்னை காவல்துறை கிடையாது" என்று அன்பு தெரிவித்தார்.

- சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com