குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை சைதாப்பேட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்ற போது, அடையாறு அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. கார் மோதியதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. மேலும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
விசாரணையின் போது, மதுபோதையில் கார் ஓட்டியதை நீதிபதி முன்பு ஜெய் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ததுடன் ரூ.5200 அபராதமும் விதிக்கப்பட்டது.