”ரூ.36 லட்சம் கொடுத்ததற்கு நன்றி”.. மறுமணம் செய்ய எண்ணிய பெண்ணை ஏமாற்றிய ஆசாமி!

”ரூ.36 லட்சம் கொடுத்ததற்கு நன்றி”.. மறுமணம் செய்ய எண்ணிய பெண்ணை ஏமாற்றிய ஆசாமி!
”ரூ.36 லட்சம் கொடுத்ததற்கு நன்றி”.. மறுமணம் செய்ய எண்ணிய பெண்ணை ஏமாற்றிய ஆசாமி!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் 30 நாட்களில் 36 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வசித்து வரும் 35 வயது பெண் ஒருவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த அவர், வரன் பார்க்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இவரது ப்ரொபைலை பார்த்த நபர் ஒருவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது பெயர் ஹபீப் ரஹ்மான் (38), என்றும் எனக்கு ஏற்கனவே திருமணமாகி தனது மனைவி இறந்து விட்டதாகவும், சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வசித்து வருவதாகவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று வரன் பார்த்தபோது உங்களது ப்ரொபைல் பார்த்து தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அந்த பெண் அழைக்கவே அந்த நபர் விலை உயர்ந்த சொகுசு காரில் பந்தாவாக வந்து பேசியுள்ளார், அப்போது தனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் இருப்பதாகவும் அண்ணன் கனடாவிலும் அக்கா புருனேவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அழகான பேச்சு அமைதியான குணம் நல்ல மனிதர் போல இருக்கிறார் என்று நினைத்த அந்தப் பெண்ணுக்கு பிடித்துப் போகவே அந்தப் பெண் திருமணம் குறித்து பேசியபோது அக்கா ஜூலை மாதம் சென்னைக்கு வருவார் அவர் வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் மூன்று நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும் இரண்டு நாட்களில் தந்து விடுவதாக கூறியதும் உடனே அந்த பெண் பணத்தை கூகுள் பே மூலமாக அனுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட நபர், கிஷ்கிந்தா பக்கத்தில் தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும் அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை முடிக்க பத்து லட்சம் தேவைப் படுவதாகவும் நிலம் கைக்கு வந்தால் கோடி கணக்கில் விற்பனை செய்து நம் இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண் வருங்கால கணவர் தானே என்று நினைத்து ரூ.10 லட்சம் பணத்தை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பழகிய 30 நாட்களில் சிறுக சிறுக ரூ.36 லட்சம் பணம் மற்றும் 13 சவரன் தங்க நகையை வாங்கிச் சென்ற அந்த நபர் அந்தப் பெண்ணுக்கு வாய்ஸ் மெசேஜில் பணம் கொடுத்ததற்கு நன்றி பணத்தை திருப்பித் தருவதாக கூறி பாய் சொல்லிவிட்டு செல்லை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பின்னர் மூன்று மாதமாக பல இடங்களில் அந்த நபரை தேடியும் அவர் கிடைக்காததால் தாம்பரம் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தியிடம் சென்று நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். உடனே பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் அவரது மனைவியுடன் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் ஆகி மனைவிகளுடன் வசித்து வருவதாகவும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் கணவனை இழந்தவர்கள் அவர்களை வெப்சைட் மூலமாக பணம் கட்டி அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளாமல் நூதன முறையில் பணம் நகை வாங்கி விலை உயர்ந்த கார், வாட்ச், விலை உயர்ந்த துணிமணிகள், மட்டுமின்றி உல்லாச வாழ்க்கை வாழ மாதத்தில் 10 நாட்களுக்கு கோவா, மற்றும் கேரளா சென்று பணத்தை செலவிட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்து விலை உயர்ந்த வாட்ச், கார் இரண்டு சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com