
சிங்கப்பூர் Pantech பிசினஸ் ஹப்பில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், 52 வயது நிரம்பிய விக்ட் லிம் சியோங் ஹாக் என்பவர் ஓட்டுநர் மற்றும் உதவியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். 2022 ஜூலை 1ஆம் தேதி வேலையில் சேர்ந்த அவரை, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்றே அடிப்படை சோதனை பீரியட் முடிவதற்குள்ளாகவே வேலையை விட்டு அனுப்பியுள்ளது அந்நிர்வாகம்.
இதனால் மனதளவில் விரக்தியடைந்த அவர், 2022 செப்டம்பர் 1ஆம் தேதி மதியம் 2:20 மணியளவில் வேலை செய்த அலுவலகத்திற்கு வந்துள்ளார். எதனால் வேலையை விட்டு அனுப்பப்பட்டோம் என்ற மனக்கசப்பில் இருந்த லிம், அருகிலிருந்த கடைக்கு சென்று பூட்டு வாங்கிவந்து அலுவலகத்தை பூட்டியுள்ளார்.
சரியாக உணவு இடைவேளை நேரத்திற்கு வந்திருந்த லிம், ஊழியர்கள் அனைவரும் உணவு சாப்பிட சென்றிருப்பார்கள் என தவறாக நினைத்து பூட்டு போட்டுள்ளார். ஆனால் அலுவலகத்திற்குள் 9 ஊழியர்கள் இருந்துள்ளனர். அலுவலகத்திற்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்ததால் சம்பவம் மேலும் சிக்கலாகியுள்ளது. பூட்டுப்போட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு பாத்ரூமிற்கு செல்ல எழுந்த வந்த ஒரு ஊழியர் அலுவலகம் வெளிவழியாக பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து வெளியே சென்றிருந்த சக ஊழியர்களுக்கு போன் செய்து கதவை திறக்குமாறு மாட்டிக்கொண்ட ஊழியர்கள் கூறியுள்ளனர். பிறகு பூட்டை திறக்க முடியாததால் அருகிலிருந்த அலுவலக ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். விவரம் அறிந்து நிறுவனத்திற்கு வந்த உரிமையாளர், பூட்டை உடைப்பதற்கு ஒரு நபரை அழைத்து வந்து அனைவரையும் திறந்துவைத்துள்ளார். பிறகு சிசிடிவி காட்சிகள் வழியாக பார்த்தபோது லிம் கதவை பூட்டிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
லிம் மீது நிறுவனத்தின் உரிமையாளர் போலீஸ் வழக்கு கொடுத்த நிலையில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்கு வந்த நிலையில், 1 மணி நேரம் 9 ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்துவைத்ததற்காக அவருக்கு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அலுவலக ஊழியரை தவறாக திட்டி மெசேஜ் அனுப்பியதாகவும் லிம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு 3 வருடங்கள் சிறை கிடைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. லிம் கூற்றுப்படி, அவர் அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் பூட்டியதாக கூறியுள்ளார்.