குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தாய்
கும்பகோணம் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை பெற்ற தாயே உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூரைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் அடிக்கடி குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. அது போல பொங்கலன்று தனது மனைவி வேம்பரசியிடம் குடித்து விட்டு தகராறு செய்ததால் கோபித்துக் கொண்டு தனது இரண்டு மகன்களுடன் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கருப்பையன் நேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது தாய் மாரியம்மாளுடனும், தந்தை கரும்பாயிரத்துடனும் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய் மாரியம்மாள் அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த கருப்பையன் சம்பவ இடத்திலே உரியிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் காவல்துறையினர் கருப்பையனின் தாய் மாரியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிழந்த கருப்பையனுக்கு 10 வது படிக்கும் ஹரிஹரன் என்ற மகனும், 7 வது படிக்கும் கலையரசன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.