லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் போல் நடித்து அரசு அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது

லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் போல் நடித்து அரசு அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் போல் நடித்து அரசு அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது

நீர்வளத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எனக் கூறி 25 லட்ச ரூபாய் பணத்தை பறிக்க முயன்று தப்பிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள அரசு நீர்வளத் துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோகன் (56). இவர் கடந்த 23 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறிக் கொண்டு ஒருவர் வந்துள்ளார்.

’’உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. உங்களை கைதுசெய்ய வாரண்டும் உள்ளது. அதை சரி செய்வதற்கு 25 லட்சம் ரூபாய் தரவேண்டும்’’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். பயந்து போன அசோகன், வாகன ஓட்டுநர் முகுந்தனை அழைத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறிய நபருடன் தாடண்டர் நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டில் பணம் எதும் இல்லாத நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஐஓபி வங்கி லாக்கரில் பணம் இருக்கிறது. அங்கு சென்று பணத்தை எடுத்துத்தருவதாகக் கூறி வீட்டில் இருந்த லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு அசோகன் சென்றுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அவரது மனைவி அருள்மொழி கணவரின் உடன்பிறந்த தம்பி கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் டிஎஸ்பி அண்ணாதுரைக்கு நடந்த சம்பவம் குறித்து போனில் விளக்கியுள்ளார். இதையடுத்து அவர் விசாரித்ததில் வந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து வரவில்லை என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அருள்மொழி, சிந்தாதிரிப்பேட்டை ஐஓபி வங்கி மேலாளரை தொடர்புகொண்டு, தனக்கும் கணவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது. அதனால் லாக்கரை திறக்க அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அசோகன் வங்கிக்குச் சென்றபோது மேலாளர் லாக்கரை திறக்க அனுமதிக்கவில்லை.

இதையடுத்து நுங்கம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது போலீசார் அசோகனை தொடர்புகொண்டு காரை சாலையோரம் நிறுத்தும் படி கூறியுள்ளனர். உடனே அந்த மர்ம நபர் யார் என விசாரித்ததும், போலீஸ் எனக் கூறியதை அடுத்து உஷாராகி காரில் இருந்து இறங்கிவிட்டு, நாளை வந்து பணத்தை வாங்கிக் கொள்வதாக கூறி தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு தரமணி காவல் நிலையத்தில் நீர்வளத் துறை அதிகாரி அசோகன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மோசடி நபரை தேடி வந்தனர்.

இதையடுத்து சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் மறைந்திருந்த போலி அதிகாரியை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பெயர் சென்னையன் (55), என்பதும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டதால், அதனை ஈடுகட்ட செய்திகளை பார்த்து லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நடித்து அரசு அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது 417, 511, 170 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என்றதும் அதிகாரி ஏன் பயந்துள்ளார்? இது அதிகாரி லஞ்சம் வாங்குவதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com