“காதலித்த போதே வேறொரு பெண்ணுடன் திருமணம்”: மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றியவர் கைது
மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாலவிடுதி களுத்தரிக்காப்பட்டியை சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வயது 30. மாற்றுத்திறனாளியான இவர் மயிலாடுதுறையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்ய புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கண்ணன் (31) அடிக்கடி வந்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் 70 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருந்த இந்தப் பழக்கம் மெல்ல காதலாக மாறியதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி கண்ணன் அதற்கான ஏற்பாட்டை செய்யச்சொல்லி தேவி குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி திடீரென திருமணத்தை நிறுத்துமாறு கண்ணன் போன் மூலம் குறுஞ்செய்தி செய்துள்ளார். ஏன் என்று கேட்டபோது அதற்கு அவர் சாக்குப்போக்கு சொல்லியுள்ளார்.
கண்ணனைப் பற்றி தேவி விசாரிக்கும் போது அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருப்பது தெரியவந்தது. மேலும் கண்ணன் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தேவி கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.