கல்லூரி மாணவர் கொலை வழக்கில் திருப்பம் - கொலையாளிகள் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பொறியியல் கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 38 நாட்களுக்கு பிறகு கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் தமிழ்வாணன் சமயபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் லால்குடி அருகேயுள்ள செவிலியர் கல்லூரியில் படிக்கும் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சூழலில் கடந்த ஜனவரி 15 ம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் சிறுகனூர் அருகே உள்ள மலைமாதா தேவாலயத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இருவரும் குமுளூர் வனப்பகுதியின் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தமிழ்வாணனை கத்தியால் குத்தியுள்ளனர். அதோடு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில், அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் காயமடைந்த தமிழ்வாணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து தமிழ்வாணன் தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், லால்குடி அருகே புஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் கார்த்திகேயன், செல்வகுமார் மகன் பிரதாப் மற்றும் இவர்களது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், ராம்குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், தமிழ்வாணனும் மகேஸ்வரியும் தனிமையில் இருந்த போது, நாங்கள் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தோம். காதலர்களை ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் தமிழ்வாணனை கத்தியால் குத்தி கொலை செய்ததை கார்த்திகேயனும், மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து கொலைகளை இருவரும் ஒப்புக் கொண்டதால், சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், பிரதாப் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ராம்குமார், சரவணகுமார் இருவரையும் விடுவித்தனர்.