மதுரை: மருத்துவமனை படுக்கையில் நோயாளி வெட்டிக்கொலை; சிறார் உட்பட 8 பேர் கைது
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென் மாவட்ட மக்களுக்கு மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக் கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை, சிகிச்சையில் இருந்த மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொலை வழக்கில் முருகனுக்கு தொடர்பு இருந்ததால் அவரை பழிதீர்க்கும் நோக்கத்தோடு இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கரும்பாலை பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, விக்கி,தவசி,ராமச்சந்திரன், சல்மான்கான் மற்றும் ஒரு சிறார் உட்பட 8 பேரை மதிச்சியம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை சம்பவம் நடைபெற்ற அன்று மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் உட்பட 3 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.