மூதாட்டியை கட்டிப் போட்டு 8 லட்சம் கொள்ளை: சென்னையில் துணிகரம்
சென்னை மாதவரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 8 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி அமுதா. மகளிர் சுய உதவிக் குழுவில் இணைந்து சீட்டுப்பணம் வசூலித்து வருகிறார். இந்நிலையில் அமுதாவின் தாயார் நாகலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சீட்டு பணம் தருவதாக கூறிக் கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென அவரை கட்டிப் போட்டு விட்டு, பீரோவில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த பாண்டி கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதவரம் பால் பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.