மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - 7 பேருக்கு தூக்குத் தண்டனை

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - 7 பேருக்கு தூக்குத் தண்டனை
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - 7 பேருக்கு தூக்குத் தண்டனை

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு சென்னை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அறிவித்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் என்ற பகுதியில் 10 கோடி மதிப்பிலான நிலம் ஒன்று இருக்கிறது. இந்த நிலம் தொடர்பான பிரச்னையில் சென்னையிலிருந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.

இது சம்பந்தமாக அவருடைய மைத்துனர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் கூலிப்படையினர்கள், ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 10 பேரை கைதுசெய்திருந்தனர். அதில் ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆன நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி இன்று காலை உத்தரவிடப்பட்டது. மேலும்  இவர்களுக்கான தண்டனை சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு சென்னை நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறது. குற்றம்புரிந்தவர்களில் தீவிர குற்றம் புரிந்தவர்களான பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு இரட்டை தூக்கு என்ற அடிப்படையில் கொலை வழக்கு மற்றும் கூட்டு சதி என்ற இரண்டு பிரிவுகளில் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்ரூவர் ஐயப்பனுக்கு தண்டனை கிடையாது. இவர்கள் இன்று மாலைக்குள் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com