திருத்தணி அருகே தனிப்படை போலீசாரின் அதிரடி சோதனையில் 61 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான பொன்பாடி சோதனைச் சாவடியில் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு முழுவதும் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 61 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ், அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ், பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ், ஆவடி கோவில் பதாகை பகுதியை சேர்ந்தச் சுரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பரசுராமன் ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.