குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நபரை அவரது மனைவி மற்றும் குழந்தைகளே அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
அம்பாவடி பகுதியைச் சேர்ந்தவர் வீணு பர்மர்(50 வயது). இவர் அம்பேத்கர் காலணி என்ற இடத்தில் ஒரு வீடு வைத்திருக்கிறார். அந்த வீட்டை தன் பெயரில் மாற்றவேண்டும் என மனைவி ரஞ்சன் விரும்பி கேட்டிருக்கிறார். ஆனால் அவர் தரமறுக்கவே, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரஞ்சன் தனது மகள் ஹினால்(19 வயது) மற்றும் மகனுடன்(17 வயது) சேர்ந்து உருட்டைக் கட்டையால் தாக்கியுள்ளனர்.
பலத்த அடிபட்ட பர்மர் தனது மூத்த சகோதரர் ரமேஷுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினார். உடனே ரமேஷ், உறவினருடன் வீட்டிற்கு வந்தார். பர்மரின் நிலையைப் பார்த்து, சிகிச்சை அளிக்க சோலா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சையை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் மே 5ஆம் தேதி நடந்திருக்கிறது.
அடுத்த நாள் மே 6ஆம் தேதி பர்பமர் தனது வீட்டிற்கு வெளியே மயக்கநிலையில் கிடந்தார். அதே பகுதியில் வசிக்கும் அவருடைய உறவினர் ராஜு என்பவர், உடனே ரமேஷை அழைத்து தகவல் கொடுத்தார். மேலும் 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவலின்ப்படி, ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அங்கு வருவதற்கு முன்பே பர்மர் இறந்துவிட்டார்.
இறந்த நபரின் பிரேத பரிசோதனை முடிவுகள் ஆகஸ்ட் 18ஆம் தேதிதான் வந்துள்ளது. அதில் அந்த மனிதனுக்கு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியால்தான் மரணம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனது சகோதரரை கடந்த 10 ஆண்டுகளாகவே சொத்துக்களை தன் பேரில் மாற்றும்படி அவரது மனைவி துன்புறுத்தி வந்ததாக ரமேஷ் கூறியுள்ளார். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபின் மேலும் அதிகமாக துன்புறுத்தியாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.