50 லட்சத்தில் வீடு, ஆடி கார்: ஆபாசமாக பேசி ஆடம்பரமாக வாழ்ந்த யூ-டியூபர் மதன்

50 லட்சத்தில் வீடு, ஆடி கார்: ஆபாசமாக பேசி ஆடம்பரமாக வாழ்ந்த யூ-டியூபர் மதன்
50 லட்சத்தில் வீடு, ஆடி கார்: ஆபாசமாக பேசி ஆடம்பரமாக வாழ்ந்த யூ-டியூபர் மதன்

ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாகப் பேசி பெருமளவில் சொத்துகளை சேர்த்துள்ள பப்ஜி மதன் தேடப்பட்டுவரும் நிலையில், அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வடபழனியை சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தான் யூடியூப் பயன்படுத்தி வருவதாகவும், MADAN, TOXIC MADAN 18+, PUBG Madan Girl fan, Richie Gaming YT  போன்ற சேனல்களில் MADAN angry at his girtfriend, Strictly 18+, Tamil  PUBGM  போன்ற டைட்டில்களில் வீடியோக்களை பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

அந்த வீடியோக்களில் பெண்களை மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி மதன் என்பவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட PUBG Game ஐ Online ல் விளையாடும்போது அதனை Stream செய்து விடுகிறார். அவருடையை வீடியோக்களை கேட்பவருக்கு தொல்லை தரும் வகையிலும், எரிச்சல் ஊட்டும் வகையிலும் பெண்களின் கற்பு நெறியை அவமதிக்கும் வகையிலும் பெண்களின் அந்தரங்க விஷயத்தை குறிப்பிடும் வகையிலும் உள்ளது.

Madan சேனலை பெரும்பாலும் சிறுவயதினர் அதிகம் பார்ப்பவர்களாக உள்ளனர்.  மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையிலான இவருடைய பேச்சு Youtube Online-ல் தினமும் வெளியாகிறது.மேற்படி வீடியோக்களை பார்ப்பவர்களின் மனதில் பாலியல் வக்கிர நோக்கம் தோன்றும் வகையிலும், பாலுணர்வை தூண்டும் வகையிலும் அவருடைய பேச்சு உள்ளது.

எனவே அவரது சேனல்களை தடை செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகாரில் கூறியுள்ளார். இதற்கிடையில் பப்ஜி மதன் மீது பல்வேறு புகார்கள் ஆன்லைன் மூலம் காவல்துறைக்கு வந்தது. 159 புகார்கள் மீது, தமிழக காவல்துறை அந்தந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பப்ஜி மதன் தலைமறைவானது காவல்துறைக்கு பெரும் சவாலானது. மதன் எங்கு இருக்கிறார் என தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது பின்னணி குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசார் சேகரித்தனர். இந்நிலையில் மதன் சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த வேங்கைவாசல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரிந்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்ய அங்கு சென்றனர். ஆனால் அனைவரும் தலைமறைவானது தெரிந்தது. சொந்த ஊரான சேலத்தில் இருப்பதை அறிந்து சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்றனர்.

அங்கு மதனின் மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் மட்டுமே இருந்தனர். இதையடுத்து இருவரையும் சென்னை கொண்டு வந்தனர். கிருத்திகாவின் 8 மாத ஆண் குழந்தையையும் சென்னைக்கு கொண்டு வந்தனர். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து மதன் குறித்து விசாரணை நடத்தினர். பிறகு மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். விசாரணையில் மதன் நடத்தும் யூட்யூப் சேனல்களுக்கு அட்மினாக கிருத்திகா இருந்து வந்ததாலும், வீடியோவில் வந்த ஆபாச பேச்சுக்களை இவரே பேசியதும் தெரியவந்தது.

சேலத்தை பூர்வீகமாக கொண்ட மதனும் கிருத்திகாவும் பொறியியல் பட்டதாரிகள். அரசால் தடைசெய்யப்பட்ட PUBG கேமை ஆன்லைனில் விளையாட அதற்காக யூடியூப் சேனல்கள் துவங்கி அதில் 8 லட்சம் பேர்களை Subscriber ஆக சேர்த்துள்ளனர். வீடியோக்களில் பெண்களின் அந்தரங்கம் குறித்து ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்துவந்ததை கிருத்திகா ஒப்புக்கொண்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். 

மதன் சென்னை வீட்டில் வைத்துதான் தனது யூ-ட்யூப் சேனலை இயக்கி வந்துள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக மதன், தான் நடத்தி வந்த யூட்யூப் சேனல்கள் மூலம் மாதம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை பணம் சம்பாதித்து வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். யூ-ட்யூப்பில் மதன் பேசும்போது அதற்கு பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிருத்திகா பெண் வாய்ஸ் கொடுத்துள்ளார் போன்ற தகவல்கள் போலீசாரின் விசாரணையில் வெளியானது. அவரது வீட்டிலிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன், டேப்லட், கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டது. மதன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து கிருத்திகா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சைபர்கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதிக்காததால் பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தான் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். ஆபாச பேச்சு மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து ஐம்பது லட்சம் ரூபாய்க்கு 2 சொந்த வீடு வாங்கியுள்ளதும் 2 சொகுசு கார்களையும் (ஆடி, பிஎம்டபிள்யூ) வாங்கியிருப்பதாக கிருத்திகா தனது வாக்குமூலத்தில் கூறியதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கிருத்திகாவை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர்கிரைம் போலீசார் ஆஜர்படுத்தினர். வருகிற 30ம் தேதிவரை கிருத்திகாவை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கிருத்திகா தனது 8 மாத ஆண் குழந்தையை தன்னுடனேயே சிறைக்குள் அழைத்து சென்றார். குறிப்பிட்ட வயது வரை குழந்தை சிறையில் தாயுடன் இருக்க விதிமுறைகள் இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறைக்கு அனுப்பபட்டனர்.

மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பாலியல் தொல்லையால் பாதிப்படைந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் தைரியமாக முன்வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அவர்களது பெயர் விவரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என சென்னை கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆர்.சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com