மனைவியின் சிகிச்சைக்காக சேர்த்துவைத்த ரூ.5 லட்சம் பணம் திருடுபோனதையடுத்து கண்ணீர் விட்ட காவலாளியிடம், சென்னை பெருநகர காவல்துறையினர் பணத்தை மீட்டு கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சபிலால். இவர் காவலாளியாக உள்ளார். இவர் மனைவியின் சிறுநீரக மருத்துவ சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் மற்றும் 1 ½ சவரன் தங்க நகையை சேர்த்து வைத்திருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் பணம் மற்றும் 1 ½ சவரன் தங்க நகையை திருடிச்சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சபிலால், கண்ணீருடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.4,70,000/- பணமும் 1 ½ சவரன் தங்க நகையும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட காவலாளி சபிலால் ஆனந்த கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.