வலையில் சிக்கிய ரூ.12 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் - விற்க முயன்ற குமரி இளைஞர்கள் கைது

வலையில் சிக்கிய ரூ.12 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் - விற்க முயன்ற குமரி இளைஞர்கள் கைது
வலையில் சிக்கிய ரூ.12 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் - விற்க முயன்ற குமரி இளைஞர்கள் கைது

தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸை சொகுசு காரில் கடத்திவந்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபட முயன்ற 5 வாலிபர்களை கைத செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 12 கிலோ திமிங்கல எச்சம், சொகுசு கார், 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு முயற்சிகாளை காவல்துறை எடுத்துவருகிறது. விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய விற்பனைக்கு தடை செய்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை காரில் கடத்திச்சென்று சட்ட விரோதமாக விற்பனைசெய்ய சிலர் முயற்சி செய்துவருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு காரில் வந்த 5 வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் 5 வாலிபர்களையும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் குளச்சல் காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.

அந்த வாலிபர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த டேனியல், மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த், உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிபின், திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெனித் மற்றும் அஜித் என்பதும் தெரியவந்தது. மேலும் வாலிபர்கள் 5-பேரும் தடை செய்யப்பட்ட சர்வதேச சந்தையில் சுமார் 12 கோடி ரூபாய் வரை விலை போகும் 12 கிலோ திமிங்கல உமிழ்நீரை சொகுசு காரில் பதுக்கி கேரளாவிற்கு கடத்திச்சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து வாலிபர்கள் 5 பேரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்த 12-கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து அவர்களை குலசேகரம் வனச்சரக அலுவலர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வாலிபர்கள் 5 பேர் மீதும் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸை சட்ட விரோதமாக கடத்தி விற்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவர்களை நீமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரி விஜயகுமார் மீனவர்கள் தங்கள் வலையில் சிக்கும் திமிங்கல உமிழ்நீரை 48-மணி நேரத்தில் வனத்துறையிடமோ அல்லது கடல் காவல் நிலையத்திலோ ஒப்படைக்க வேண்டும் என்றும், தடையை மீறி விற்பனையில் ஈடுபட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com