பாஸ்பரஸ் குண்டுகள் துளைக்கப்பட்டு இறந்து கிடந்த பெண் யானை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

பாஸ்பரஸ் குண்டுகள் துளைக்கப்பட்டு இறந்து கிடந்த பெண் யானை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!
பாஸ்பரஸ் குண்டுகள் துளைக்கப்பட்டு இறந்து கிடந்த பெண் யானை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஜவளகிரி வனப்பகுதியில் பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.

வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் காட்டுயானை உயிரிழந்து கிடப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற, மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயினி, தளி வனச்சரகர் சுகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் உயிரிழந்த பெண் காட்டுயானையின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அதேஇடத்தில் உயிரிழந்த பெண் காட்டுயானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காட்டுயானையின் உடலில் பாஸ்பரஸ் குண்டுகள் துளைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காட்டுயானையை மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள்  தீவிர விசாரணையில் இறங்கினர்.



விசாரணையில் ஜவளகிரி அடுத்துள்ள திம்மன்தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன் (50) என்பவர் நாட்டு துப்பாக்கியால் பெண் காட்டுயானையை சுட்டது தெரியவந்தது. அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், தான் பட்டியில் வளர்த்து வரும் மாடுகளை பெண் காட்டுயானை தாக்க வந்ததால் அதனை துப்பாக்கியால் சுட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். சுடப்பட்ட காட்டுயானை காட்டுப்பகுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது

இதனைத்தொடர்ந்து மாரப்பனை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com