வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த மாமியார், மருமகளை கட்டிப்போட்டு 25 பவுன் நகைக் கொள்ளை

வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த மாமியார், மருமகளை கட்டிப்போட்டு 25 பவுன் நகைக் கொள்ளை
வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த மாமியார், மருமகளை கட்டிப்போட்டு 25 பவுன் நகைக் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மாமியார், மருமகளை கட்டிப் போட்டுவிட்டு பட்டப்பகலில் 25 பவுன் நகைகளை கொள்ளையடுத்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் போலீசார் தேடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் வசித்துவருபவர் அப்துல் ரஹீம். இவருடைய மனைவி பல்கிஸ்பீவி மற்றும் அவரது மருமகள் ஷேக்கா ஆகிய இருவரும் இன்று மதியம் தங்களது வீட்டில் சமையல் செய்துகொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூன்று பேர் வீட்டின் முன்புற கதவின் வழியாகவும் பின்புற கதவின் வழியாகவும் உள்ளே நுழைந்திருக்கின்றனர். வீட்டின் கதவை தாழிட்டு சமைத்துக் கொண்டிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழட்டித் தருமாறு மிரட்டியுள்ளனர்.

அவர்கள் இருவரும் மறுக்கவே பல்கீஸ்பீவியை கட்டிப்போட்டு ஒரு அறைக்குள் தள்ளி கதவை மூடிய கொள்ளையர்கள், எதிர்ப்பு தெரிவித்து ஓடிய ஷேக்காவை எட்டி உதைத்து கீழே தள்ளி அவரது கை மற்றும் கால்களை கட்டிப் போட்டிருக்கின்றனர். பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு அந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர்.

சம்பவம் குறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்களை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கை கால்களை கட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com