கூடுவாஞ்சேரி என்கவுன்ட்டர்: ரவுடிகள் உயிரிழந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை!

காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனின் இடது கையை ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் வெட்டிய நிலையில், இருவரையும் காவல் ஆய்வாளர் முருகேசனும், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனும் துப்பாக்கியால் சுட்டனர்.

சென்னை தாம்பரம் அருகே காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் 2 பேர் உயிரிழந்தனர். தாம்பரம் அருகே காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு காரில் ஆயுதங்களுடன் வந்த 4 பேர் காவல்துறையினரை தாக்கினர். இதில் காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனின் இடது கையை ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் வெட்டியுள்ளனர். உடனடியாக இருவர் மீது காவல் ஆய்வாளர் முருகேசனும், உதவி ஆய்வாளர் சிவகுருநாதனும் துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் இரண்டு ரவுடிகள் சுடப்பட்டனர். பின் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், வழியிலலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே மற்ற இருவர் தப்பியோடினர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். உயிரிழந்த சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உட்பட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரமேஷ் மீதும் 5 கொலை வழக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com