
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தின்போது ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து சென்னை வழியாக 425.8 கிலோ கஞ்சா திருச்சிக்கு கடத்தப்படுவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு மே 5ம் தேதி சென்னை கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த விருதுநகர் மாவட்ட பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனையிட்டனர்.
அப்போது, 425 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துராசா, அப்துல் ராஜாக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.