சென்னை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (40). இவர் அதேபகுதியில் பூட்டிக்கிடந்த தனியார் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக பணிபிரிந்து வருகிறார்.
இந்நிலையில், பாழடைந்த கட்டிடமும், காலியான இடமும் இருப்பதால் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவலாளி ஏழுமலை, அங்கேயே தீ மூட்டி சாராயம் காய்ச்சி வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி ஏழுமலை மற்றும் அவரது நண்பர் விஜயராஜ் (36) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 10 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சியதாக வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.