தண்ணீர் பிடித்த 16 வயது சிறுமி மீது தீவைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது பைனா கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு தோரே. இவர் மகள் நிதி. நேற்று இரவு அருகில் உள்ள அடிபம்பில் தண்ணீர் அடிக்கப் போனார். அப்போது அங்கு பீரு, சோனு, நீரஜ் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள், ’எங்க ஏரியாவுல வந்து தண்ணீர் பிடிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ’மீறி தண்ணீர் பிடித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அதைக் கண்டுகொள்ளாமல் தண்ணீர் அடித்தார் நிதி.
இதனால் கோபமான அவர்கள் நிதியின் மீது தீவைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர் போட்ட சத்தத்தை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்க் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ரமேஷ் பாபு, காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர்கள், தீ வைத்த கும்பலில் ஒருவனைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.