திருப்பூர்: மாமியாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி - 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
செய்தியாளர்: கார்வேந்த பிரபு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா வேடபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜன் - பத்மாவதி தம்பதியர். ராஜனுக்கும் இவரது மாமியார் காளியம்மாளுக்கும் இடையே கடந்த 28-06-2010 அன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போத, ராஜன் அவரது மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாமியார் காளியம்மாள் இறந்த நிலையில் மனைவி பத்மாவதியும் காயமடைந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு தப்பிச்சென்ற ராஜன் கடந்த 14 ஆண்டுகளாக பதுங்கி இருந்துள்ளார். இவர் மீது மடத்துக்குளம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கவே தலைமை காவலர் மகேந்திரன் மற்றும் முதல்நிலை காவலர் நல்லபெருமாள் ஆகியோர் இவரை கர்நாடக மாநிலம் மங்களூரில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த தலைமை காவலர் மகேந்திரன் மற்றும் முதல்நிலை காவலர் நல்லபெருமாள் ஆகியோரை உடுமலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம் பாராட்டினார்.