மதுரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..குற்றத்தில் ஈடுபட சிறுவனுக்கு உடந்தையாக இருந்த தாய்?
மதுரையில் வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, 17 வயது சிறுவன் மற்றும் அதற்கு உதவிய தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை சக்கிமங்கலம் சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி பகவதியின் மகனுக்கு 17 வயது ஆகிறது. இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே 14வயது சிறுமி சம்பவத்தன்று காலை கல்மேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய பகவதி மகன் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த பகவதி, "என் மகனை திருமணம் செய்து கொள்" என்று வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் இதற்கு சிறுமி மறுத்துள்ளார். எனவே ஆத்திரம் அடைந்த பகவதி, அந்த சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு பகவதியின் மகன் , 14 வயது சிறுமியை இரண்டு நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து , பகவதி மற்றும் அவரது மகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.