10 கிலோ மரகதலிங்கம் கடத்தல்: கார் விபத்தால் சிக்கிய கடத்தல்காரர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 10 கிலோ எடையுள்ள, மரகதலிங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், விராலிமலை அருகே கொண்டமநாயக்கன்பட்டி என்ற இடத்தில் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை காவல்துறையினர், போக்குவரத்தை சரி செய்து, காரில் சோதனை நடத்தினர்.
அப்போது அதில் 8 முதல் 10 கிலோ வரை எடை கொண்ட விலை மதிப்பற்ற மரகதலிங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் மரகதலிங்கத்தை மீட்டு விராலிமலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னரே கடத்தல் குறித்த முழுவிவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.