”நீங்க இந்த மாதிரி ஆபாச வீடியோ பார்த்திருக்கீங்க”-சைபர் கிரைம் என மிரட்டி பணம் பறிப்பு

”நீங்க இந்த மாதிரி ஆபாச வீடியோ பார்த்திருக்கீங்க”-சைபர் கிரைம் என மிரட்டி பணம் பறிப்பு

”நீங்க இந்த மாதிரி ஆபாச வீடியோ பார்த்திருக்கீங்க”-சைபர் கிரைம் என மிரட்டி பணம் பறிப்பு
Published on

கிருஷ்ணகிரியில் ஆபாச படம் பார்த்ததாக நகை கடை ஊழியரிடம் சைபர் கிரைம் போலீஸ் என கூறி மிரட்டி பணம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகையை சேர்ந்தவர் சந்திரகுமார்(33). இவர் ஓசூரில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சந்திரகுமார் செல்போனுக்கு ஒருபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசியவர்கள், சென்னை சைபர் கிரைம் காவல் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், “நீங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை சமீப நாட்களாக பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும்” எனக்கூறி மிரட்டி உள்ளனர்.

அதை நம்பிய சந்திரகுமார் ‘போன் பே’ மூலம் மூன்று தவணைகளாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கும் போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்திரகுமார் தான் ஏமாற்றப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் பேசிய மொபைல் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் ‘சிம்கார்டு’ விற்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீசார் விசாரணை செய்த போது பணம் பெற்றவர் சேலம் மாவட்டம், கரடூர் பகுதியை சேர்ந்த மணிமுத்து என்பதும், அவரும் நண்பர்கள் மூவர் இணைந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. மேலும் யூ டியூப்பில் போலீஸ் ‘வாக்கி டாக்கி’ சத்தத்தை வைத்துவிட்டு அதன் பின்னர் மொபைலில் பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுபோல பலரிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரிந்துள்ளது.

இதையடுத்து சந்திரகுமாரிடம் சைபர் கிரைம் போலீசார் போல் மிரட்டி பணம் பறித்த தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மால்வின் (22) மணிமுத்து (23), கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பர்த்தி பகுதியை சேர்ந்த வேடியப்பன் (28) மற்றும் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதிதை சேர்ந்த மாரியப்பன் (38), ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மொபைல் போன், வங்கி கணக்கு புத்தகம், டெபிட்கார்டுகள், 4 சிம்கார்டுகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நான்கு பேரும் இதுபோல் எத்தனை பேரிடம் மிரட்டி பணம் பெற்றார்கள் என்பது அவர்களிடம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com