”பெயரில் மட்டும் புனிதர் இருந்தால் போதாது..அவரையும் பின்பற்ற வேண்டும்”- நீதிமன்றம் கண்டனம்

”பெயரில் மட்டும் புனிதர் இருந்தால் போதாது..அவரையும் பின்பற்ற வேண்டும்”- நீதிமன்றம் கண்டனம்
”பெயரில் மட்டும் புனிதர் இருந்தால் போதாது..அவரையும் பின்பற்ற வேண்டும்”- நீதிமன்றம் கண்டனம்

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி, வேலூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியிடம் குழந்தையின் தாய் நாடியுள்ளார். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் உள்ளதாக, அந்த பள்ளியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், சிறப்பு ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி, குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டிருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத குழந்தையின் தாய், அவர்களின் அந்த நிராகரிப்பை எதிர்த்து குழந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கடந்த 1870ல் இருந்து 1960ம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த புனிதர். இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய புனிதரின் கொள்கைகளை பின்பற்றாமல், அவரின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின் பிந்தைய நாட்களில் குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதற்கு, அந்த பள்ளி முன் வந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை தாமாக முன் வந்து முதலிலேயே செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் அரசுத் தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு, அதில் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மிஷனரி பள்ளியில் தான் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது தனக்கு திருப்தியளிக்கும். இல்லையேல் இதுசம்பந்தமாக தாயே எந்த முடிவையும் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com