புதுச்சேரி, வில்லியனூர் அருகே இரு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ரௌடி உடல் மீது "பதிள் சம்பவம் தொடரும்" என போர்த்தப்பட்ட வாசகம் இருந்ததை அவருடைய நண்பர்கள் முகநூலில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
புதுச்சேரி, மணவெளி பகுதி காசிவிசுவநாதர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் மதன், ரவுடியான இவர் மீது கொலை மற்றும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு மதன் தன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து ஆரியபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில் நேற்று மதனின் உடல், அவரின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது, அப்போது அவரின் உடல் மீது வெள்ளை போர்வை போற்றி அதன் மீது "பதிள் சம்பவம் தொடரும்" என்று எழுதப்பட்டு இருந்தது, இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து முகநூலில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.