பீச், இரவு விடுதிகளுக்கு சென்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று
உலகெங்கிலும் இளைஞர்கள் இரவு விடுதிகள் மற்றும் கடற்கரைகளுக்குச் செல்வதால் 15 வயது முதல் 24 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு விகிதம் ஐந்து மாதங்களில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, பிப்ரவரி 24 முதல் ஜூலை 12 வரை 15-24 வயதுக்குட்பட்டவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 4.5% லிருந்து 15% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவைத் தவிர ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4.8 மில்லியன் பேரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என தெரிவித்துள்ளது. ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளில் இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை திடுக்கிடும் வகையில் உள்ளது.
பெரும்பாலான இளைஞர்கள் வேலைக்குச் செல்கின்றனர். மேலும் அவர்கள் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதில்லை. மேலும் அவர்கள் வெளியே செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் என WHO தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் டோக்கியோ நகரில் அதிகாரிகள் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனையை நடத்துவதற்கான வசதிகளை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நல்ல காற்றோட்டத்துடன் போதுமான இடவசதியை வழங்கவும், சத்தமாக பேசுவதைத் தவிர்க்கவும் வேண்டுமென்று இரவு விடுதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.