கொரோனாவால் இறந்தவருக்கு 'நெகட்டிவ்' வந்ததாக மெசேஜ்.. மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர்!!
வேலூரில் கொரோனாவால் இறந்தவருக்கு நெகட்டிவ் வந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர் மன உழைச்சலுக்கு ஆளாகியதாகவும், நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த 57 வயது மூதாட்டி ஒருவருக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 24.07.2020 அன்று உயிரிழந்துள்ளார்.
இவர் கொரோனாவால் உயிரிழந்ததாக சான்று அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து செல்லாமல் நேரடியாக மயானத்திற்க்கு எடுத்து சென்று உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10.08.2020-ம் தேதி உயிரிழந்த மூதாட்டியின் கணவர் செல்போன் எண்ணுக்கு கொரோனா பரிசோதனை "நெகட்டிவ்" என வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டதால் அவரது உடலை கூட பார்க்க முடியாத சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டதாகவும் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களிடம் மனு அளித்தனர்.

