அடக்கத்திற்காக சொந்த ஊர் வந்த பெண்ணின் உடல்.. இறுதிச் சடங்கில் பங்கேற்ற பலருக்கு கொரோனா

அடக்கத்திற்காக சொந்த ஊர் வந்த பெண்ணின் உடல்.. இறுதிச் சடங்கில் பங்கேற்ற பலருக்கு கொரோனா
அடக்கத்திற்காக சொந்த ஊர் வந்த பெண்ணின் உடல்.. இறுதிச் சடங்கில் பங்கேற்ற பலருக்கு கொரோனா

சென்னையில் இறந்த பெண்ணின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்த பெண்ணின் கணவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மதியானி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய, அப்பெண்ணின் கணவர் உட்பட 8 பேர் மதியானி கிராமத்திற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்களுடன் ஊர் மக்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்த பெண்ணின் உடலுடன் வந்த உறவினர்கள் 8 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 பேருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இறந்த பெண்ணின் கணவரான 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 110 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 15 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் நகரப்பட்டியை சேர்ந்த மருந்தாளுனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த முதியவருக்கு சிறுநீரக பிரச்னை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com