தஞ்சையில் இரண்டாவது டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி போட வந்தவர்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 1,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 76 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சையில் கோவாக்ஸின் மற்றும் கோவிசீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப போடப்பட்டு வரும் நிலையில் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்காக நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது, மருந்து இல்லை எனக்கூறி 75-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இரண்டாவது தவணை எப்போது செலுத்துவது என்பது தெரியாமல், முதல் டோஸ் தடுப்பூசி வீணாகி விடுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் கோவாக்ஸின் தடுப்பூசி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்கி அனைவருக்கும் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது “தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தேவையான அளவிற்கு தடுப்பூசி வந்துவிட்டது. மாநில அரசு தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.