கோவை நகைக் கடையில் பணியாற்றிய 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அஜாக்ரதையாக செயல்பட்டதாக அந்த ஜூவல்லரி கிளை மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜுவல்லரியில் விற்பனையாளர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனடியாக ஜூவல்லரி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில் அந்த ஜூவல்லரியில் பணியாற்றி வந்த 90 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே கடையில் 51 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்குள் இந்த நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்டு கொரொனா தொற்று ஏற்பட காரணமாக அமைந்த குறிப்பிட்ட ஜுவல்லரி நிர்வாகம் மீது, சுகாதார துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் ஜூவல்லரி மேலாளர்கள் விஜயகுமார் , விபின் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.