“ஒமைக்ரான் தீவிர பாதிப்பில்லையெனக்கூறி அலட்சியம் வேண்டாம்” - ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

“ஒமைக்ரான் தீவிர பாதிப்பில்லையெனக்கூறி அலட்சியம் வேண்டாம்” - ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

“ஒமைக்ரான் தீவிர பாதிப்பில்லையெனக்கூறி அலட்சியம் வேண்டாம்” - ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
Published on

ஓமைக்ரான் தொற்றால் தீவிர பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது, அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் 17% கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது, கேரளா போன்ற மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. தற்போது 1.91 லட்சம் படுக்கைகள் கையிருப்பு உள்ளது. கொரோனாவிற்கு மட்டும் 1.28 லட்சம் படுக்கைகள் உள்ளது. ஆகவே பதற்றம் தேவையில்லை.

இப்போதும் டெல்டா வகை தொற்று பரவுகிறது. இருப்பினும் அது 10-15 % அளவில்தான் பதிவாகி வருகிறது. இவையன்றி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 7% விழுக்காட்டினர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களில், 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.

மேலும் ஓமைக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று கவனக்குறைவாக மக்கள் இருக்க வேண்டாம். இன்னும் வரப்போகும் அடுத்த இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை, காசிமேடு போன்ற பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பிட்ட நாளில் கட்டாயம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பது போன்று இல்லாமல், தங்கள் உடல்நலத்தில் அக்கறையோடு இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com