இந்தியாவில் ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கல்வி நிலையங்கள் செயல்பட தடை மாதிரியான நிபந்தனைகளை விதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் ஊரடங்கை தவிர்க்க மக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
“நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். கடந்த காலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மீண்டும் நடக்க கூடாது என்பதற்காக கடுமையான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பெங்களூருவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. அதனடிப்படையில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. மாநில மக்களின் ஆரோக்கியம் கருதி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மருத்துவமனைகளில் கூடுதலாக 4000 ஐசியூ படுக்கை வசதிகளை ஏற்படுத்த சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைக்கவும் முயற்சித்து வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலத்தில் எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 64 பேர் ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 9415 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.